Thursday, November 29, 2012

மாயன்கள் - 1. Every one must read this.


http://tamil25.blogspot.in/2012/11/2012-2.html 

இந்த ஆய்வை வெளியிட்ட  திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள்


21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியாது என்று இன்னொரு பிரிவினரும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் ,அவர்கள் அவ்வாறு கூற காரணமாக இருப்பது மாயன் ,
அதான் தெரியுமே மாயன் கலெண்டர் 2012 ல முடியுது அதனால அழியும் னு சொல்றாங்க இது எல்லாருக்கும் தெரியுமே
புதுசா நீ என்ன சொல்லபோரன்னு கேட்குறீங்களா? கண்டிப்பா இது ஒரு புது விஷயம் தான் 

சரி இப்போ இந்த கட்டுரையை பத்தி சொல்லிட்றேன்
இது ஒரு ஆராய்சி கட்டுரை இத எழுதுனவரு ராஜ்சிவா
உயிர்மை.கொம் தளத்துல உயிரோசைங்க்ர வார இதழ் ல வாராவாரம் வந்தது .
வாங்க கட்டுரைக்கு போவோம்  இன்னும் 8 மாதங்களில், 2012ம் ஆண்டு டிசம்பர் . இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது ’2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது’ என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான்.
“சரியாக டிசம்பர் 21 உலகம் அழியப் போகிறதா?” என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது.
இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.
அது….! ‘மாயா’.
மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் இந்த அழிவு பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படிச் சொல்லியிருந்தால், என்னதான் சொல்லியிருப்பார்கள்? அதை ஏன் நாம் நம்ப வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்.
இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்ற நினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.
என்ன என்பது இது பற்றி விளக்கமாகப் பார்க்கலாமா…..?
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும், ஒருநாள் திடீரென அந்த வீட்டிலிருந்து, அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்? திகைத்துப் போய்விட மாட்டீர்களா? ஆச்சரியத்துக்கும், மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா?
சரி, அதுவே ஒரு வீடாக இல்லாமல், உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவே திடீரென ஒரே இரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கே இப்படி என்றால், ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள் மறைந்தால்….?
ஆம்….! வரலாற்றில் இது நடந்தது. ஒரு நாட்டில் வாழ்ந்த, மிக மிக மிகச் சிறிய அளவினரை விட, மற்ற அனைத்து மக்களும், திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்த ஒரு அடையாளங்களையும், மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.
ஏன் மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம் வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே போனார்கள்? எப்படிப் போனார்கள்? யாருக்கும் தெரியவில்லை. எதுவும் புரியவில்லை.
இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள் பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.
அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவை அவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.
இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர் பின்வாங்கத் தொடங்கினார்கள்.
மாயா என்றாலே மர்மம்தானா? என நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.
சரி, அப்படி என்னதான் நடந்தது? ஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டு கொண்டார்கள்? ஆராய்ந்த சுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?
இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம். ஒன்று விடாமல் பார்க்கலாம். அவற்றை நீங்கள் அறிந்து கொண்டால், இதுவரை பார்த்திராத, கேட்டிராத, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்….
கடந்த பகுதியில் , சுவடே இல்லாமல் ஒரு இனம் எப்படி அழிந்திருக்கலாம் என மாயாக்கள் வாழ்ந்த இடங்களை ஆராயச் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்தது ஒரு மாபெரும் அதிர்ச்சி. மாயாக்கள் விட்டுச் சென்ற கல்வெட்டுகளை ஆராய்ந்த அவர்களை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது அது.
சரி, அப்படி என்னதான் நடந்தது? அங்கு என்னதான் இருந்தது? என்ற கேள்வியுடன் கடந்த பதிவில் விடைபெற்றோம் அல்லவா..?
அதை உங்களுக்கு விளக்குவதற்கு முன்னர், வேறு ஒரு தளத்தில் நடந்த, வேறு ஒரு சம்பவத்துடன் இன்றைய தொடரை ஆரம்பிக்கிறேன். இப்போது சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும், மாயாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும் வேறு வகையில் சம்பந்தம் உண்டு.
இராஜராஜ சோழன் என்னும் மாபெரும் தமிழ் மன்னனை யாரும் மறந்திருக்க மாட்டோம். தமிழ்நாட்டில் கி.பி. 985ம் ஆண்டு முதல் கி.பி. 1012 ஆண்டு வரை தஞ்சையை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னன்தான் இராஜராஜன்.
இன்றும் உலகம் தமிழனைத் திரும்பிப் பார்க்கும் வண்ணம், அவன் உலக அதிசயங்களுக்கு நிகரான ஒரு அழியாச் சின்னத்தைக் கட்டினான். அதுதான் தஞ்சையில் அமைந்துள்ள, ‘தஞ்சைப் பெரிய கோவில்’ என்றழைக்கப்படும் பிரமாண்டமான கோவில்.
அதன் மிகப் பிரமாண்டமான இராஜகோபுரம் மிகவும் அழகான கலை நயத்துடன் கட்டப்பட்டது. அதில் யாருமே எதிர்பார்க்காத விசேசம் ஒன்று இருந்ததுதான் இங்கு நான் ராஜராஜ சோழனை இழுப்பதற்குக் காரணம்.
ஆம்! அந்தக் கோபுரத்தில் காணப்பட்ட ஒரு உருவச் சிலை எல்லாரையும் புருவத்தை உயர்த்த வைத்தது. ஒரு இந்துக் கோவில் கோபுரத்தில் இது சாத்தியமா? என்னும் கேள்விகள் ஒலிக்கும் வகையில் இருந்தது அந்த உருவச் சிலை. கோபுரங்களில் இந்துக்களின் நாகரீகங்களையும், கலைகளையும், தெய்வங்களையும் சிலைகளாக வடிப்பதுதான் நாம் இதுவரை பார்த்தது.
ஆனால் இது……..! அப்படி அந்தக் கோபுரத்தில் இருந்த உருவச் சிலை என்ன தெரியுமா….?
ஒரு மேலைத் தேச நாட்டவன், தலையில் தொப்பியுடன் காணப்படுகிறான். தஞ்சை மன்னனுக்கும் இந்துக்களின் ஆச்சாரத்துக்கும் ஏற்பே இல்லாத் தன்மையுடன் அந்தச் சிலை பெரிதாகக் காட்சியளிக்கிறது.
அந்தப் படம் இதுதான்……..!
“முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சுப் போடுவது போல” என்று சொல்வார்களே, அது போல இந்த மேலைத்தேச மனிதனின் சிலை, பாரம்பரியமிக்க இந்துக்களின் கோபுரத்தில் அமைந்திருக்கிறது என்றால், அதற்கென ஒரு காரணம் நிச்சயமாக இருந்தே தீருமல்லவா…?
இராஜராஜ சோழனின் காலத்தில் யவனர்களாக வந்து, எமது கோவிலிலேயே உருவமாக அமைவதற்கு, அந்த மேற்குலகத்தவனுக்கு வரலாற்றில் பதிவாகாத வலுவான காரணம் ஒன்று இருந்திருக்கும் அல்லவா…?
ஆனால், அதை ஆராய்வதல்ல இப்போது எங்கள் வேலை.
சம்பந்தமே இல்லாத இடத்தில், சம்பந்தமே இல்லாதவர்கள் தொடர்புபட்டிருப்பார்கள் என்பதற்கு எம்முள்ளேயே இருக்கும் சாட்சிதான் இது. இந்தச் சம்பவம் போலத்தான் மாயா சமூகத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களுக்கும் சம்பந்தமே இல்லாத வடிவங்களில் ஆச்சரியம் காத்திருந்தது.
அந்த ஆச்சரியமும் முடிச்சுப் போட முடியாத மூச்சை அடைக்கும் ஆச்சரியம்தான். தஞ்சையில் யவனன் இருந்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஆனால் மாயா இனத்தில் இருந்தவை திகைக்க வைத்தது.
அவை என்ன தெரியுமா……..?
மாயாக்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது அங்கு கிடைத்த சித்திரங்களிலும், சிலைகளிலும் வித விதமாக அயல்கிரக வாசிகளின் உருவங்கள்தான் காணப்பட்டன.
அட….! இதுவரை இந்த மனிதன் நல்லாத்தான் பேசிக் கொண்டிருந்தார். இப்ப என்ன ஆச்சு இவருக்கு என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் அது உண்மை என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகவும் இருந்தது.
என்ன இது புதுக்கதையாக இருக்கிறதே என்பீர்கள்.
உண்மைதான். புதுக்கதைதான். புதுக்கதை மட்டும் அல்ல, புதிர்க்கதையும் கூட. எனவே அவை பற்றி நிறைய எழுத வேண்டும். அதனால் முதலில் முன்னோட்டமாக மாயாக்களிடம் கண்டெடுத்த ஒரு படத்தைப் போடுகிறேன் நீங்களே பாருங்கள்.

இந்த படத்தை 2நிமிஷம் பாருங்க ஏதாவது புரியுதா ?
இந்த படத்தில் உள்ளது ராக்கெட் ,அந்த மனிதன் விண்வெளிக்கு செல்லும் மனிதன் என்று சொன்னால் நம்புவீர்களா ?
காட்டுவாசி காலத்துல ராக்கெட் ஆ,விண்வெளிக்கா னு புருவத்த உயர்த்தி மறுபடியும் படத்த பாக்க போறீங்களா ?
இன்னும் சில படங்கள் போடுறேன் நம்ப முடியுதானு பாருங்க
இது இப்படியும் இருந்திருக்கலாம் னு கற்பனையா வரஞ்ச படம்
மத்திய அமெரிக்கா
மாயன் வாழ்ந்த இடங்களில் அமைந்த பிரமிடுகளுக்கள் ஒன்றில் அமைந்திருந்த சுரங்கத்தில் அவர்களின் அரசன் ஒருவன் புதைக்கப்படிருக்கிறான். அந்த அரசனின் உடலை வைத்து மூடிய இடத்தில் இந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சித்திரத்தில் இருப்பது மாயன்களின் அரசனாக இருப்பதற்கும் சான்றுகள் உண்டு என்றாலும், அந்தச் சித்திரம் ஏன் அப்படி வரையப்பட்டிருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
இல்லப்பா ,இது வேற ஏதோ சித்திரம் நீதான் ராக்கெட் ,அது இது ன்னு குழப்புரன்னு மனசு சொல்லுதா?
உங்களப்போலவே இது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்கலாம் அல்லது இந்தச் சித்திரம் வேறு எதையோ குறிக்கலாம் என்று ஒதுங்கப் போனவர்களுக்கு, அவற்றுடன் கிடைத்த வேறு பல பொருட்கள் சந்தேகங்களை மேலும் வலுவடையச் செய்தது.இது ராக்கெட் ஆக இருக்க முடியாது என்கிற அவர்களின் நம்பிக்கையை தகர்த்தது
அப்படி என்னதான் கிடைத்தன..?
அந்தச் சித்திரத்தை மிகச் சரியாக உற்று நோக்கிப் பாருங்கள். அதில் ஒரு ஒழுங்கு முறையையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாத அமைப்பையும், காட்சியையும் அது கொண்டிருப்பது, நிச்சயம் எமக்குத் தெரிகிறது. எதுவுமே இல்லாத ஒரு காலத்தில், எதையும் பார்க்காத ஒன்றை வைத்து இப்படி ஒரு கலை வடிவைப் படைக்கும் சாத்தியம் அக்காலங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. அத்துடன் இந்தச் சித்திரம் மாயன்களால் கட்டப்பட்ட ‘பிரமிட்’ (Pyramid) வடிவக் கட்டடங்களுக்குக் கீழே இருந்த ஒரு சுரங்கத்தில், பாதுகாப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது (இந்தப் பிரமிட்டுகள்தான் எமக்கு மாயன்கள் பற்றிய ஆச்சரியங்களைப் பின்னர் கொடுக்கப் போகின்றன
அந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்ட பிரமிட்டை மேலேயும், அதன் சுரங்கவழியைக் கீழேயும் தந்திருக்கிறேன். இதைப் பார்க்கும்போது, மாயாக்கள் இந்தச் சித்திரத்துக்குக் கொடுத்த முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும்.
அதெல்லாம் சரிதான். இது ஒன்றை வைத்துக் கொண்டு மாயாக்களுக்கும், ராக்கெட்டுக்கும் சம்பந்தம் உண்டு என்று, எப்படி முடிவெடிக்க முடியும்” என்னும் கேள்வி சுலபமாக எமக்குத் தோன்றுவது இயல்புதான். ராக்கெட்டுடன் சம்பந்தம் என்றால், அப்புறம் விண்வெளிதானே! இதற்கெல்லாம் சாத்தியம் என்பதே கிடையாது என்று அடித்துச் சொல்லும் உங்கள் மனது.
அதனால் மாயன்கள் வாழ்ந்த இடங்களில் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த இவற்றை முதலில் பாருங்கள். நவீன வின்வெளிப் பிரயாணியின் படத்துக்கும், மாயாக்களின் மற்ற இரண்டு படங்களுக்கும் உள்ள தொடர்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.
இத்துடன் இவை முடிந்து விடவில்லை. மாயன்களின் ஆச்சரியங்கள் எம்மைத் தொடர்ந்தே தாக்குகின்றன. அந்த ஆச்சரியங்களை நான் சொற்களால் வடிப்பதை விடப் படங்களாகவே உங்களுக்குத் தந்தால்தான், அதிகமான விளக்கங்கள் உருவாகும்
‘ஆயிரம் வார்த்தைகள் சொல்லும் கருத்தை ஒரு காட்சி சொல்லிவிடும்’ என்பார்கள். அதனால் உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, நான் படங்களைத்தான் இனி அதிகமாகத் தரலாம் என நினைக்கிறேன்.
மாயன் கட்டடங்களை மேலும் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மாயன் பிரதேசமான மத்திய அமெரிக்காவில், அடுத்ததாக ஒன்றைக் கண்டதும் வெலவெலத்தே போய்விட்டனர். அவர்கள் ஏன் வெலவெலத்தனர் என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் எதைக் கண்டெடுத்தார்கள் என்பதை நீங்களே பாருங்க
இந்தப் படத்தைத் தனியாகப் பார்த்தால் உங்களுக்குப் புரிவதற்கு சற்றுக் கடினமாக இருக்கலாம். எனவே, ஒரு நவீன விண்கலத்தில் நெருப்பைக் கக்கும் கீழ்ப்பகுதியையும், இந்தப் பொருளையும் சற்று ஒப்பிட்டுத்தான் பாருங்கள்.
இவற்றையும் தற்செயலென்றே நாம் வைத்துக் கொள்வோம். மாயன் சமூகத்தினர் எதையோ செய்து வைத்திருக்க, நான் அதை ராக்கட்டுடன் (Rocket) ஒப்பிட்டு சும்மா தேவையில்லாமல் பீதியைக் கிளப்புகின்றேன், அறிவியல் பற்றிப் பேசுவதாகச் சொல்லிவிட்டு ஒட்டுமொத்தமாக மூட நம்பிக்கையை வளர்க்கிறேன் என்றே வைத்துக் கொள்வோம்.
ஆனால் அடுத்து அகப்பட்டவை, எல்லாவற்றையும் அடியோடு தூக்கிச் சாப்பிட்டது. அதைப் பார்ததும் நான் சொல்வதில் ஏதும் உண்மை இருக்கலாமோ என்றும் நீங்கள் நினைப்பீர்கள். ராக்கெட்டைப் படமாக வரைந்திருப்பவர்கள் அதில் பயணம் செய்தவர்களையும் படமாக வரைந்துதானே இருக்க வேண்டும். இப்போது இந்தப் படங்களையும் பாருங்கள்.
இது ஒரு தற்கால, விண்வெளிக்குச் செல்லும் நவீன மனிதனின் படம்.
இவை மாயன்களிடம் இருந்து பெறப்பட்ட வடிவங்கள்…………!
இதற்கு மேலும் நான் இந்த விண்வெளி உடை போன்ற தோற்றத்துடன் படம் போடத் தேவையே இல்லை என்றே நினைக்கிறேன். இந்தப் படங்களே உங்களுக்குப் பல செய்திகளை விளக்கியிருக்கும்.
மாயா சமூகத்தினரின் கலாச்சாரத்தை ஆராயும்போது கிடைத்த ஓவியங்கள், சிலைகள் போன்றவற்றில், நவீன விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தமான பலவற்றைக் காணக் கூடியதாக இருந்தது என்னவோ உண்மை. அவை உண்மையிலேயே விண்வெளி சம்பந்தமானவைதானா? அல்லது வேறு அர்த்தங்கள் உள்ளனவா என்னும் கேள்வி தொடர்ந்து எமக்குத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. ஆனாலும் இது விண்வெளி சம்பந்தமானதுதான் என்றால், அதற்கு இதுவரை நான் கொடுத்த சாட்சியங்கள் போதுமானவைதானா?
அட, எப்பவும் விண்வெளி உடையிலேயே இருக்கிறீர்களே, வேறு எதுவுமேயில்லையா? என்கிறீர்களா!
சரி, இப்பொழுது இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இது எப்படிச் சாத்தியம் என்று சொல்லுங்கள். இவை எதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்ல முடிகிறதா…?
பறவைகளா? பூச்சிகளா? இல்லை மீன்களா?
அல்லது…………….!
ஆகாய விமானங்களா….?
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்……..!
பூச்சிகள், பறவைகள், மீன்கள் என்றால், முதல் படத்தில் அந்த நடுவே இருக்கும் உருவத்தில், எப்படிக் காற்றாடி போன்ற அமைப்பு வந்தது?
என்ன தலை சுற்றுகிறதா…..? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட, தங்கத்தினால் செய்யப்பட்ட இந்த உருவங்கள் சொல்லும் உண்மைகளை நாம் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால், மேலும் பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். அந்த உண்மைகள் இவற்றை விடக் கனமானவை.
இந்த படத்துல இருக்கிறது விமானமாங்க்ர சந்தேகம் எனக்கும் இந்த கட்டுரைய படிக்கும் போது இருந்தது ,அதுக்காக இதபத்தி இணயத்துல தகவல் தேட ஆரம்பிச்சேன்
அப்போ எனக்கு கிடச்ச தகவல்கள் ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு
இந்த படத்துல அந்த விமானம் 4 வது இடத்துல இருக்கிறது ,இதுல என்ன ஆச்சர்யம் னா
1.இந்த விமான உருவம் கிடச்சது மாயன்கள் கிட்டருந்து ஆனா மேல நான் குடுத்திருக்கிற படம் நம்ம புராணங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்ட விமானங்கள்
2.இந்த விமானத்த பயன்படுத்துனது தேவர்களின் தலைவன் இந்திரன்
3.இந்த படத்துல 8வது இருக்குற விமானம் புஷ்பக விமானம்
புஷ்பக விமானம் எங்கயோ படிச்ச மாதிரி இருக்கே னு தோணுதா?
ராமாயணத்துல ராவணன் சீதைய கடத்தி கூட்டிட்டு போனது இந்த புஷ்பக விமானம்தான்
உண்மயவே இந்த விமானங்கள் லாம் இருந்துதுதானு ஆச்சர்யமா இருக்கா,
இந்த ஆச்சர்யத்த அப்டியே pause பண்ணி வச்சிகோங்க,இந்த விமானத்தோட பெயர்கள் ,எப்படி இயங்கும் ,புராண காலத்துல என்ன எரிபொருள் பயன்படுத்துனாங்க ,யார்லாம் பயன்படுத்துனாங்க எல்லா தகவல்களயும் கட்டுரையோட இன்னொரு பகுதில சொல்றேன் ,
இப்போ கட்டுரையோட ஆச்சர்யத்துக்குள்ள நுழைவோம்
மேலே உள்ள படத்தில் இருக்கும் இந்த மாயா இன மனிதன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இந்தப் படத்தைப் பார்க்கும் போது, ஏதோ வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் உங்களுக்கு இருக்கும். அது என்னவாக இருக்கும் என்னும் பிரச்சினையை உங்களிடமே விட்டுவிட்டு நான் தொடர்கிறேன்…….!
கடந்த தொடரில் கொடுத்திருந்த படங்களில் இருப்பவை பறவைகளா? பூச்சிகளா? மீன்களா? இல்லை விமானங்களா? என்னும் சந்தேகத்துடன் கடந்த பதிவில் உங்களிடமிருந்து விடைபெற்றிருந்தேன். அந்த உருவங்கள் ஏற்படுத்திய பாதிப்பு உங்களை விட்டு அகலச் சிறிது காலமாகும், அந்த அளவுக்கு உருவங்கள் இருந்தது என்னவோ நிஜம்தான். இல்லையா?
இதுவரை, ‘ரைட் சகோதரர்கள்’ விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், அவற்றைப் புறம் தள்ளும் பல இரகசியங்கள் எங்கோ ஒரு மூலையில், மத்திய அமெரிக்காவில், எப்போதோ மறைந்திருக்கின்றது என்பது ஆச்சரியம்தானே! அதைவிட ஆச்சரியம், இந்தச் சிறிய விமானங்கள் போலுள்ளவற்றை விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது, அவை விமானப் பறப்புச் சக்திக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டு கொண்டார்கள். ரைட் சகோதரர்கள் கண்டு பிடித்த விமானம் கூட மிகப் பழமை வாய்ந்தது. ஆனால், இந்த உருவங்கள் நவீன விமானங்கள் போல வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
இதுவெல்லாம் எப்படிச் சாத்தியம்? விஞ்ஞான அறிவையும், விண்வெளி அறிவையும் மாயா இனத்தவர் பெற்றது எப்படி? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காட்டுவாசிகள் போல வாழ்ந்த மக்கள், எப்படி இவ்வளவு அறிவைக் கொண்டிருக்க முடியும்? இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாக, நாம் உடன் புரிந்துகொள்ளக் கூடியது, விண்ணிலிருந்து மாயன் இனத்தவரை நோக்கி யாராவது வந்திருக்க வேண்டும் என்பதும், அவர்கள் மூலமாக மாயா இனத்தவர்களுக்கு இந்தளவுக்கு அறிவு கிடைத்திருக்க வேண்டும் என்பதும்தான். அப்படி இல்லையெனில், ஒன்றுமே இல்லாத ஒன்றுக்கு இவ்வளவு ‘பில்டப்‘பை நான் கொடுப்பதாகவும் இருக்கலாம்.
ஒருவேளை விண்வெளியில் இருந்து அயல்கிரகவாசிகள் வந்திருந்தால், அவர்களை மாயாக்கள் பதிவு செய்திருப்பார்கள் அல்லவா? அப்படியானால் அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்? ‘ஏலியன்’ என்று அழைக்கப்படும் அயல்கிரகவாசியின் வினோத தலையுடன் உள்ள உருவங்களை எத்தனை படங்களில்தான் நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட உருவங்களை மாயன்களும் பார்த்திருப்பார்களோ?
ஆம்! அதற்கு சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுவது போல மாயன் உருவாக்கிய வடிவங்கள் சில உள்ளன. அவற்றை நீங்களே பாருங்கள்…….!
இந்த உருவங்களைப் பார்த்தீர்கள் அல்லவா? இவை அயல்கிரகவாசிகளின் உருவம்தான் என்றால், அவர்கள் மாயன்களிடம் மட்டும்தான் வந்திருக்க வேண்டுமா…? இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் மாயன் இனத்தவருக்கு மட்டும்தான் ஏற்பட்டதா அல்லது வேறு யாருக்காவது ஏற்பட்டதா? அப்படி வேறு இனத்தவருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதா எனப் பார்க்கும் போது, அங்கும் எமக்கு ஆச்சரியங்களே காத்திருந்ததன.
பிரபலமான எகிப்திய பிரமிட்களை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். பல மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கிய உலக அதிசயமாகப் பார்க்கப்படுவது இந்தப் பிரமிட்கள். இந்தப் பிரமிட்கள் என்றாலே எமக்குத் தோன்றுவது பிரமிப்புத்தான்.
எகிப்தியப் பிரமிட்களில் இருந்த சித்திர வடிவ எழுத்துகளை ஆராய்ந்த போது அங்கு கிடைத்ததும் அதிர்ச்சிதான்.
அப்படி என்னதான் இருந்தது?
கொஞ்சம் மூச்சை அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்…………!
இப்போ இவற்றைப் பாருங்கள்……….!!
என்ன உங்களால் நம்பமுடியவில்லையல்லவா? சினிமாப் படங்களில் வருவது போன்று, அதே வடிவிலான உருவம். ஆச்சரியமாக இல்லை அல்லது சினிமாப் படங்களில் இவற்றைப் பார்த்துதான் ஏலியன் உருவங்களை உருவாக்கினார்களா?
சரி, இதுக்கே அசந்தால் எப்படி? இன்னும் இருக்கிறது பாருங்கள்.
மேலே காட்டப்படிருக்கும் இரண்டு படங்களிலும் உள்ள வித்தியாசமான தலைகளுடன் கூடிய மனிதர்களைக் கவனியுங்கள். அப்படி உருவத்துடன் ஒப்பிடக்கூடிய எந்த ஒரு எகிப்தியரும் இருந்திருக்கவில்லை என்பதுதான் இங்கு ஆச்சரியம். மனித இனத்தின் தலையானது அன்று முதல் இன்று வரை சில குறிப்பிட்ட பரிமாணங்களைக் கொண்டதாகவே கூர்ப்படைந்து வந்திருக்கிறது. அது தாண்டிய எதையும் மனிதனாக எம்மால் பார்க்க முடிவதில்லை. ஆனால் பின்னால் நீண்டதாகக் காணப்படும் இத்தலையுள்ள உருவங்கள் எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.
இப்போது நான் தரும் இந்த உருவத்தைப் பாருங்கள்………!
எகிப்திய மன்னன் பாரோ அகெனாட்டன் (Pharaoh Akhenaten) என்பவனின் மனைவி இவள். மகாராணி. இவள் வாழ்ந்த காலம் கி.மு.1370 இலிருந்து கி.மு.1330. இவள் பெயர் ‘நெபர்டிடி‘ (Nefertiti). இவளைப் பற்றி இங்கு ஏன் நான் சொல்கிறேன் என்று யோசிப்பீர்கள். காரணம் உண்டு.
இவளது தலைக் கவசம் இல்லாத சிலை ஒன்று கண்காட்சிச் சாலையில் இருக்கிறது. அது இதுதான்.
இவளது தலை ஏன் இவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்? எகிப்திய வரலாற்றில் நெபர்டிடியின் சரித்திரம் மர்மம் வாய்ந்ததாகவே இருக்கிறது. இவள் அயல்கிரகத்தில் இருந்து வந்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா…?
சரி, நெபர்டிடியின் தலை கொஞ்சம் பெரிதென்றே நாம் வைத்துக் கொள்ளலாம். இவளுக்கும் ஏலியனுக்கும் சம்பந்தம் இல்லையென்றே எடுத்துக் கொள்வோம். ஆனால் நெபர்டிடியும் அவளது கணவனும் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் இந்தச் சித்திரத்தைப் பார்த்ததும் அந்த நம்பிக்கையும் அடியோடு தகர்ந்து விடுகிறதல்லவா?
இவை எல்லாவற்றையும் விட்டுவிடலாம். எதுவுமே இல்லாததை நாங்கள் என்னென்னவோ சொல்லி மாற்றிவிடுகிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் இந்தப் படம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா..?
இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். சரி, கொஞ்சம் பெரிதாக்கிப் பார்க்கலாம்.
விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட் படத்தில் தெரிகிறதா…? அதன் அளவு எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதை அதன் அருகே இருக்கும் மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
அடப் போப்பா ….! சும்மா கூராக இருப்பதெல்லாம் உங்களுக்கு ராக்கெட்டா என்று கேட்கத் தோன்றுகிறதா?
சரி, அப்போ, இதையும் பாருங்கள்……..!
இந்தக் காலத்தில் இருக்கும் அனைத்து விதமான விமானங்களும் அடங்கிய ஓவியம் இது,என்ன சொல்றதுன்னே தெரியாம வாயாடச்சு போச்சா ?
நான் இந்தத் தொடரை, மாயா இனத்தவர் சொல்லியபடி, ’2012 இல் உலகம் அழியுமா? இல்லையா?’ என ஆராய்வதற்காகவே ஆரம்பித்தேன். ஆனால் மாயா பற்றி எதுவுமே சொல்லாமல், ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். மாயா இன மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதன் பேரில், உலகம் அழியும் என்று நாம் ஏன் நம்ப வேண்டும்? இந்தப் பயம் அறிவியலாளர்களிடையே கூட, இரண்டாகப் பிரிந்து விவாதிக்கும் அளவுக்குப் பெரிதாகியதன் காரணம் என்ன? அந்த அளவுக்கு இந்த மாயாக்கள் முக்கியமானவர்களா? என்ற கேள்விகளுக்கு நாம் பதில் தேடும்போது, உலகத்தில் நடைபெற்ற பல மர்மங்களையும் நாம் பார்த்தே ஆக வேண்டும்.
அத்துடன், நான் குறிப்பிடும் சம்பவங்களும், படங்களும் அறிவியலுக்கு ஒத்து வராத, மூட நம்பிக்கைகளைச் சொல்லுவதாக நீங்கள் கருதலாம். ஆனால், உலகத்தில் பல விடுவிக்கப்படாத மர்ம முடிச்சுகள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றிற்குக் காரணமாக, திடமான ஒரு முடிவை எம்மால் எடுக்க முடிவதில்லை. ஆனாலும், அந்த மர்மங்களை நாம் தெரிந்து கொள்வதில் தப்பு ஒன்றும் இல்லை. உலகத்தில் இப்படி எல்லாம் இருக்கின்றன என்பதே தெரியாமல் எம்மில் பலர் இருக்கிறோம். அதனால் அவற்றை முதலில் பார்த்துவிடுவோம்.
நவீன விஞ்ஞானம் இன்றிலிருந்து கிட்டத்தட்ட 400 ஆண்டுகளிலிருந்துதான் ஆரம்பித்தது. அது கடந்த 100 வருடங்களில் மிகவும் அசுரத்தனமான வேகத்தில் பிராயாணித்து, இன்று எல்லையில்லாமல் விரிவடைந்து காணப்படுகிறது. பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், கண்டுபிடிக்கப்பட்டது இந்தக் காலப் பகுதிகளில்தான்.
தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) என்னும் விஞ்ஞானி 1879ம் ஆண்டுகளில் மின் விளக்கைக் கண்டுபிடித்தார் என்று எமக்குத் தெரியும். அதைத்தான் உண்மையென்றும் நாம் இன்றுவரை நம்பியும் வருகின்றோம். ஆனால், எகிப்தில் உள்ள டெண்டெரா (Temple of Hathor, Dendera) என்னுமிடத்தில், உள்ள நாலாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் சுவர்களில் உள்ள சில சித்திரங்கள் எம்மை வாயடைக்கப் பண்ணியிருக்கின்றது (அந்தக் கோவிலின் படமே மேலே ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது).
அந்தக் கோவிலின் சுவரில் என்ன சித்திரம் இருந்தது என்று பார்க்கலாமா?
இவற்றைப் பார்த்தவுடனேயே, இவை இரண்டும் மின் விளக்குகள் வடிவத்தில் இருக்கின்றன என்று நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். அவற்றைச் சரியாகப் பாருங்கள். அந்த மின் விளக்குகளின் கீழ்ப்பகுதியில் உள்ள குமிழும், அதில் பொருத்தப்பட்டிருக்கும் நீண்ட இழையும் (wire), மின் விளக்கின் உள்ளே இருக்கும் எரியிழையும், எமக்கு வேறு எதையும் ஞாபகப்படுத்த முடியாது. அந்தச் சித்திரத்தை கொஞ்சம் பெரிதாகவும், அது இருக்கும் அந்தக் கோவிலின் சுவரையும் இந்தப் படங்களில் பாருங்கள்.
என்ன விளையாடுகிறீர்களா? அது ஏதோ கத்தரிக்காய் போல ஒரு உருவத்தில் இருக்கிறது” என நீங்கள் அலறுவது புரிகிறது. கத்தரிக்காய் ஒரு மனிதன் பிடித்துக் கொள்ளும் அளவுக்குப் பெரிதாக இருக்காது. அத்துடன் எந்த ஒரு காயுக்கும் அடியில் உள்ள தண்டு இவ்வளவு நீளத்தில் இருக்காது. அத்துடன் அதன் நடுவே உள்ள மின்னிழை போன்ற அமைப்பும் வேறு எதிலும் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த ஒரு சித்திரத்தை வைத்து இப்படிப்பட்ட முடிவுக்கு நாம் வரமுடியாது என்பது நிஜம்தான். இது போன்ற பல அமைப்புகளுடன் கூடிய சித்திரங்கள் எகிப்து பிரமிட்களில் காணப்பட்டாலும், எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்து வெறுப்பேற்ற முடியாததாகையால், குறிப்பாக நான் தரும் இந்தப் படத்தைப் பாருங்கள். உங்கள் சந்தேகம் குறைவதற்கு சாத்தியம் அதிகமாகும்.
இந்தப் படத்தில் உள்ளவையும் மின்விளக்குகள்தானா? இல்லையா? என்கிற முடிவுக்கு நீங்கள் வருவதற்கு முன்னர், அவை வெளிச்சம் தந்தால் இப்படிக் காட்சியளிக்குமா என்னும் படத்தையும் தருகிறேன் பாருங்கள்.
இவற்றை எல்லாம் எம்மால் நம்ப முடியாது. இவையெல்லாம் வேறு ஏதோ சித்திரங்கள்’ என்று சொல்லி நானும், நீங்களும் இதிலிருந்து நகர்ந்து விடலாம். ஆனால் பாக்தாத் (Baghdad) நகரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள், ‘இல்லை, இவை எல்லாம் மின்சாரம் சம்பந்தமானவையே’ என்ற முடிவுக்கு நாம் வரவேண்டிய சூழலில், எம்மை வைத்துவிட்டது.
கி.மு.250 காலங்களில் இந்தப் பொருள் வழக்கில் இருந்திருக்கிறது. அதைத் தற்சமயம் கண்டெடுத்த ஆராய்ச்சியாளர்களே அதைக் கண்டு கொஞ்சம் அசந்தது என்னமோ உண்மைதான். அந்தப் பொருள் என்ன தெரியுமா? பாட்டரிகள்.
“என்ன பாட்டரிகளா? கி.மு.250 வருடத்திலா?” என்றுதானே கேட்கிறீர்கள். நீங்களே பாருங்கள்.
எல்லாமே நாம் இப்போதான் கண்டுபிடித்தோம் என மார்தட்டும் எங்களுக்கு, இவையெல்லாம் மறைமுகமாக சாட்டையடிகளைக் கொடுக்கின்றன. இவை பற்றி பல மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், இவை எம்மை யோசிக்க வைக்கின்றன. உங்களையும் இப்போது யோசிக்க வைத்திருக்கும்.
சரி, இவையெல்லாம் உண்மையில் மின்சாரம் சம்பந்தமானவை என்றால், இந்த அறிவை அந்தப் பழமையான மக்கள் எப்படிப் பெற்றுக் கொண்டார்கள்? இந்த மாபெரும் கேள்வியுடன் நாம் எகிப்தைவிட்டு மாயனை நோக்கி நகரலாம்.
அதற்கு முன்னர் நீங்கள் வாழ்நாளில் நம்பவே முடியாத ஒரு வரலாற்று அடையாளம் ஒன்றை சுட்டிக் காட்டிவிட்டுச் செல்கிறேன். அதைப் பார்த்தால் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்து விடுவீர்கள். ஸ்பெயினில் கி.பி.1200 ஆண்டுகளில் கட்டப்பட்ட ஒரு சர்ச்சில் உள்ள சிலையின் இந்தப் படத்தைப் பாருங்கள்.
என்ன சரியாகத் தெரியாவிட்டால் கொஞ்சம் பெரிதாகப் பார்க்கலாம்.
நவீன விண்வெளி மனிதன் ஒருவன், அதே உடைகள், காலணிகள், தலையணிகளுடன் கி.பி.1200 ஆண்டில் கட்டப்பட்ட சர்ச்சில் இருப்பது ஆச்சரியத்தின் உச்சமல்லவா?
எப்பொழுதும் விழிப்புணர்வு என்பது எமக்கு மிக அவசியமானது. நாம் எல்லாவற்றையும் நம்புகிறோம். எல்லாரையும் நம்புகிறோம். அரசியல்வாதியாக இருந்தாலென்ன, மதவாதியாக இருந்தாலென்ன, எழுத்தாளனாயிருந்தாலென்ன, எல்லாரையும் சுலபமாக நம்பிவிடுகிறோம். எமது இந்த நம்பிக்கையையே பலகீனமாகக் கொண்டு, தப்பான கருத்துகளை எம்முள் விதைப்பதற்கு ஒரு கூட்டமே எம்முன்னே காத்திருக்கிறது. அதனால்தான், அடிப்படையில் குறைந்தபட்சமாவது சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறது அறிவியல். பல விசயங்களுக்கு விடைகள் இல்லாதபோதும், தர்க்க ரீதியான முடிவுகளை எடுக்க, அறிவியல் எம்மை வற்புறுத்துகிறது. ஆதாரமில்லாத எதையும் அறிவியல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவதில்லை.
ஒன்றைச் சரியாகக் கணிப்பது என்றால் என்ன? தர்க்க ரீதியாக சிந்திப்பது என்றால் என்ன? என்பது பலருக்குத் தெரிவதில்லை. பரீட்சைகளில் வரும் வினாத்தாள்களில் ஒரு வினாவுக்கு நான்கு பதில்கள் கொடுத்திருப்பார்கள் அல்லவா? அதில் சரியான விடையைத் தெரிந்தெடுப்பது சரியான கணிப்பு. அதே நேரத்தில் சரியான விடை எதுவென எமக்குத் தெரியாத பட்சத்தில், தப்பான பதில்கள் எவையாயிருக்கும் எனச் சிந்தித்து, அவற்றை நீக்குவதன் மூலம் சரியான விடையைக் கண்டுபிடிப்பதுதான் தர்க்க ரீதியாக முடிவெடுப்பது என்பது.
ஓவியத்தில் நாம் கோடுகளையும், நிறங்களையும் படிப்படியாக, சேர்த்துச் சேர்த்து முழு ஓவியத்தைப் படைக்கின்றோம். ஆனால் சிலையில், அதைச் செய்யும் கல்லில் இருந்து தேவையற்ற பாகங்களை படிப்படியாக நீக்கி, முழுச் சிலையையும் வடிக்கிறோம். ஒன்று சேர்த்தல், மற்றது நீக்கல். இரண்டும் இறுதியில் முழுமையான படைப்பாய் மாறுகின்றன.
ஒரு விண்வெளி மனிதன் கிருஸ்தவத் தேவாலயத்தில் சிலை வடிவமாக இருக்கும் படங்களைக் கடந்த பதிவில் தந்தது ஞாபகம் இருக்கலாம். அந்தக் கிருஸ்தவ தேவாலயம் ஸ்பெயின் நாட்டில் உள்ள ‘சலமன்கா’ (Salamanca) என்னும் ஊரில் இருக்கிறது. அந்தத் தேவாலயம் கட்டப்பட்டது எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர். அதாவது கி.பி.1200 களில் கட்டப்பட்டது. அதில் எப்படி ஒரு நாசா விண்வெளிப் பயணியின் உருவம் வரமுடியும்? அதற்குச் சாத்தியம் உண்டா? எனச் சிந்தித்தால், சாத்தியமே இல்லை எனத்தான் சொல்ல வேண்டும். அந்த உருவத்தில் இருக்கும் காலணி முதல் ஜாக்கெட் வரை எல்லாமே, தத்ரூபமாக இன்றைய நவீன விண்வெளிப் பயணி போல இருப்பது என்னவோ நெருடலான விசயம். மாயாக்களோ அல்லது எகிப்திய பிரமிட்களோ இப்படிச் சித்திரங்களைக் கொடுத்தாலும், இவ்வளவு தத்ரூபமாக கொடுக்கவில்லை.
ஆராய்ந்து பார்த்ததில் அந்த சிலை உண்மையாக 800 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதில்லை எனத் தெரிய வந்தது. இந்த தேவாலயம் 1992ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட போது, இந்த விண்வெளிப் பயணியின் சிலை ஒரு போத்துக்கேய சிற்பியால் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனவே அது உண்மையாக 800 வருடப் பழமை வாய்ந்ததல்ல.
இதுவரை மாயாக்கள் வாழ்ந்த இடத்தில் இல்லாமல் வேறு இடங்களில் சுற்றித் திரிந்த நாம் இனி அவர்கள் வாழ்ந்த இடத்துக்குச் செல்வது நல்லது. இனி தொடர்ச்சியாக மாயாக்களின் மர்மங்களுக்குள் நாம் பிரயாணம் செய்யலாம் வாருங்கள்……..!
மாயன் இனத்தவர்கள் பற்றிச் சொல்லும்போது, ஆரம்பமே மாயனின் அதி உச்சக்கட்ட மர்மத்துடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால் நீங்கள் அவற்றிற்கு உங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ‘என்னடா, இந்த நபர் இவ்வளவு பில்டப் கொடுக்கிறாரே’ என்று நினைக்கலாம். நான் சொல்லப் போகும் விசயம், மாயன் இனத்தின் சரித்திரத்தின் மைல் கல்லாக அமைந்த ஒன்று. உங்களை அதிர வைக்கப் போகும் விசயமும் இதுதான். உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்களும், அறிவியலாளர்களும் இதுவரை உலகத்தில் நடைபெற்ற அனைத்து மர்மங்களின் முடிச்சுகளையும் தங்களால் இயன்ற அளவிற்கு அவிழ்த்துக் கொண்டே சென்றிருக்கின்றனர். ஆனால் அவர்கள் கூடத் தோற்ற ஒரு இடம் உண்டென்றால், அது இப்போது நான் சொல்லப் போகும் விசயத்தில்தான்.
அப்படி என்னதான் அந்த விசயம் என்று நினைக்கிறீர்கள் அல்லவா? சொல்கிறேன்……!
மாயன் இனத்தவர் வாழ்ந்த பகுதியில் ஆராய்ச்சிக்கென வந்தவர் ஒருவரின் கண்ணில் தற்செயலாகத் தடுப்பட்ட பொருளொன்று, அதைக் கண்டெடுத்தவரை மலைக்க வைத்தது. அந்தப் பொருள் ஒரு மண்டை ஓடு…….!
“அடச் சே…..! ஒரு மண்டை ஓட்டுக்கா இவ்வளவு பில்டப் கொடுத்தாய்?” என்றுதானே கேட்கிறீர்கள். கொஞ்சம் பொறுங்கள். முழுவதும் சொல்லிவிடுகிறேன். ஒரு சாதாரண மண்டை ஓட்டுக்காகவா நான் இவ்வளவு பேசுவேன்.
அது ஒரு சாதாரன மண்டை ஓடே அல்ல……! அது ஒரு ‘கிறிஸ்டல்’ மண்டை ஓடு.
ஆம்! ‘கிறிஸ்டல்’ (Crystal) என்று சொல்லப்படும் மிகவும் பலம் வாய்ந்த கண்ணாடி போன்ற ஒரு முலப் பொருளினால் உருவாக்கப்பட்ட மண்டை ஓடு அது.
இது பற்றி மேலும் சொல்ல வேண்டும் என்றால் ‘கிறிஸ்டல்’ என்பது பற்றி நான் முதலில் கொஞ்சம் விளக்கிச் சொல்ல வேண்டும். கிறிஸ்டல் என்பது சாதாரண கண்ணாடியை விட வலிமை வாய்ந்த, கடினமான ஒரு மூலப் பொருள். கண்ணாடியிலும் கிறிஸ்டல் உருவாக்கப்படும் என்றாலும், ‘குவார்ட்ஸ்’ (Quartz) போன்ற பலம் வாய்ந்த மூலப் பொருள்களினாலும் அது அதிகம் உருவாக்கப்படுகிறது. இந்த வகைக் கிறிஸ்டலை வெட்டுவது என்பது, இன்றைய காலத்திலேயே, மிகக் கடினமானது. வைரம் போன்றவறால்தான் அதை வெட்ட முடியும். அல்லது நவீன ‘லேசர்’ (Laser) தொழில் நுட்பத்தினால் வெட்டலாம்.
சரி, மீண்டும் எங்கள் கிறிஸ்டல் மண்டையோட்டுக்கு வருவோமா!
‘மிச்செல் ஹெட்ஜஸ்’ (Mitchell-Hedges) என்பவர் 1940 களில் மிகவும் பிரபலமான ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளராக இருந்தவர். அவரது வளர்ப்பு மகளின் பெயர் அன்னா ஹெட்ஜெஸ் (Anna Hedges). 1924ம் ஆண்டு மிச்செல், மாயா இனத்தவர் வாழ்ந்த இடங்களை ஆராய்வதற்காக, லுபாண்டூன் (Lubaantun) என்னுமிடத்தில் அமைந்த மாயன் கோவிலுக்குச் சென்றார் (தற்போது பெலிட்ஸே (Belize) என்னும் நாடாக அது காணப்படுகிறது). அங்கே ஒரு பிரமிட்டின் அருகே அன்னாவின் காலடியில் இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு தட்டுப்பட்டது. அப்போது அன்னாவுக்கு வயது பதினேழு.
அன்னாவினால் கண்டெடுக்கப்பட்ட அந்த மண்டை ஓடுதான் இது……!
அன்னாவால் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு எத்தனை வருசம் பழமையானது தெரியுமா…? 5000 வருசங்களுக்கு மேல். அதாவது மாயன் இனத்தவர் வாழ்ந்த காலங்களுக்கு முந்தையது இந்த மண்டை ஓடு. இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு மிக அழுத்தமாக, அழகாக, வட்டவடிவமாக தேய்க்கப்பட்டு, பளபளப்பாக செதுக்கப் பட்டிருக்கிறது. அன்றைய காலத்தில், ஒரு மாயன் ஒரு நாள் முழுவதும் இந்த மண்டை ஓட்டைச் செதுக்க ஆரம்பித்திருந்தால், அவனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலே இந்த மண்டை ஓட்டைச் செதுக்கி முடிக்க எடுத்திருக்கும். அவ்வளவு துல்லியமாக செதுக்கப்பட்டிருந்தது அந்த மண்டை ஓடு.
இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த ‘ஹூவ்லெட் பக்கார்ட்’ (Hewlett Packard) நிறுவனத்தினர், குவார்ட்ஸ் (Quartz) வகைக் கிறிஸ்டலினால் இந்த மண்டை ஓடு செய்யப்பட்டிருப்பதாகவும், நுண்ணிய மைக்ரோஸ்கோப்களினாலேயே கண்டுபிடிக்க முடியாதபடி, அது எப்படிச் செய்யப்பட்டது, எந்த ஆயுதத்தினால் செய்யப்பட்டது என்று திணறும் அளவுக்கு, மிக நேர்த்தியாக செய்யப்பட்டும் இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தனர்.
எந்த ஒரு கருவியும் கண்டு பிடிக்கப்படாத காலத்தில், அவ்வளவு வலிமையான ஒரு பதார்த்தத்தால் ஒரு மண்டை எப்படி உருவாக்கி இருப்பார்கள் மாயன்கள்? இது சாத்தியமான ஒன்றுதானா? இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்தவர்கள் சிலர், இது லேசர் தொழில்நுட்ப முறையினால்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். காரணம் அதை உருவாக்கிய அடையாளம் அதில் எப்படிப் பபார்த்தாலும் தெரியவில்லலை. லேசர் தொழில் நுட்பம் 5000 ஆண்டுக்கு முன்னால் இருந்தது என்றால் நீங்களே சிரிப்பீர்கள். அப்படி என்றால் இது எப்படி? இன்றுள்ள மனிதனால் கூட, நவீன கருவிகள் இல்லாமல் இப்படி ஒரு மண்டை ஓட்டைச் சாதாரணமாக உருவாக்க முடியாது.
இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடுகள் பற்றிய செய்தி இவ்வளவுதானா என்று கேட்டால், நான் சொல்லும் பதிலால் நீங்கள் அதிர்ந்தே போய் விடுவீர்கள். அவ்வளவு மர்மங்களை அடக்கிருக்கிறது இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு. இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு கிடைத்ததற்கு அப்புறம், மாயன் சரித்திரத்தை இந்தத் திசையில் ஆராய்ந்தால் கொட்டுகிற செய்திகள் அனைத்துமே நாம் சிந்திக்க முடியாதவையாக இருக்கின்றன. இது பற்றி மேலும் சொல்வது என்றால் சொல்லிக் கொண்டே போகலாம் என்னும் அளவுக்கு மிகப்பெரிய செய்திகளை அடக்கியது இந்த மண்டை ஓடு.
இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓட்டை அடிப்படையாக வைத்து, 2008ம் ஆண்டு ‘இன்டியானா ஜோன்ஸ் அன்ட் த கிங்டொம் ஆஃப் த கிறிஸ்டல் ஸ்கல்’ (Indiana Jones and the Kingdom of the Crystal Skull) என்னும் படம் வெளியானது. இந்தப் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஹரிசன் போர்ட் (Harrision Ford) நடித்திருக்கிறார். அத்துடன் இந்தப் படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg).
முடிந்தால் இந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படத்தில் வரும் பாத்திரம் என்பது உண்மையாகவே இருந்த ஒரு பாத்திரம். அவர்தான் மேலே நான் சொல்லிய மிச்செல் ஹெட்ஜெஸ்.
இவ்வளவு ஆச்சரியம் வாய்ந்த மண்டை ஓடு மாயாக்களால் எப்படிச் சாத்தியமானது….?
குவார்ட்ஸ் என்னும் கனிமத்தை எப்படி மாயாக்கள் எடுத்தார்கள்…..?
அதை எப்படி மண்டை ஓடு போலச் செதுக்கினார்கள்…..?
மாயாக்கள் என்ன, மனிதனாலேயே சாத்தியமில்லாத ஒன்றல்லவா இது!
அப்படிப்பட்ட மண்டை ஓடு ஒன்றே ஒன்றுதானா….?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நடுவில், அன்னாவின் கிறிஸ்டல் மண்டை ஓட்டின் பின்னர், பலர் ஆராய்ச்சிக்குக் கிளம்பினார்கள். மேலதிக ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் இது போன்ற மண்டை ஓடுகள் வெவ்வேறு இடங்களில் இருப்பது தெரிந்தது. மொத்தமாக எட்டு கிரிஸ்டல் மண்டை ஓடுகள் அடுத்தடுத்துக் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த எட்டு மண்டையோடுகளில் பெரும்பான்மையானவை, குவார்ட்ஸ் என்னும் கனிமத்தினாலும், சில ‘அமெதிஸ்ட்’ (Amethyst) என்னும் ஆபரணங்கள் செய்யும் ஒரு வகை இரத்தினக் கல்லாலும் செய்யப்பட்டவையுமாகும்.
அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட எட்டு கிறிஸ்டல் மண்டை ஓடுகளும் இவைதான்.
மேலும் மாயன் சரித்திரங்களை ஆராய்ந்தபோது, இப்படிப்பட்ட மண்டை ஓடுகள் மொத்தமாக பதின்மூன்று இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் அறிந்து கொண்டார்கள். அப்படி என்றால் இந்தப் பதின்மூன்று மண்டை ஓடுகள் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறதா? அப்படி இருந்தால், அந்தக் காரணம் என்ன….? மிகுதி ஐந்து மண்டை ஓடுகளும் எங்கே போயின? அவை கிடைத்தால் எமக்கு ஏதாவது நன்மைகள் உண்டா?
மாயன்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்த்ததில், மொத்தமாக பதின்மூன்று கிறிஸ்டல் மண்டையோடுகள் இருக்க வேண்டும் என்ற குறிப்புகள் கிடைத்தன. பதின்மூன்று மண்டைகள் ஏன் என்பதற்கான விளக்கத்தையும் ஆராய்ந்தவர்கள் ஓரளவுக்குப் புரிந்துகொண்டனர். அந்தக் காரணம் என்ன என்று சொல்வதற்கு முன்னர், உங்களை வேறு ஒரு தளத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு நடந்த சம்பவங்களை விளக்கிவிட்டு, மீண்டும் மண்டையோட்டுக்கு வருகிறேன்.
இந்தப் பூமியில் வாழும் மக்கள் அனைவரும் பகுத்தறிவுவாதிகள், பகுத்தறிவுவாதி அல்லாதவர்கள் என்னும் இரண்டு வகையாகப் பிரிந்தே வாழ்கிறார்கள். இங்கு பகுத்தறிவு என்று நான் சொல்வது நாத்திகத்தை அல்ல. பலர் பகுத்தறிவையும், நாத்திகத்தையும் ஒன்றாக்கித் தமக்குள் குழப்பிக் கொண்டிருக்கின்றனர். பகுத்தறிவின் ஒரு அங்கமாகத்தான் நாத்திகம் இருக்கிறது. ஒரு பகுத்தறிவுவாதி, நாத்திகராக இருப்பார். ஆனால் ஒரு நாத்திகர் பகுத்தறிவுவாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பையும் தாண்டி, பல மூடநம்பிக்கைகளையும் மறுக்கிறது.
பகுத்தறிவுவாதி, பகுத்தறிவுவாதி அல்லாதவர் ஆகிய இருவரும், ஒருவரை ஒருவர் பார்க்கும்போது, அடுத்தவரை ஏளனமாகத்தான் பார்க்கின்றனர். தான் நினைப்பது மட்டும்தான் சரி என்னும் நினைப்பால் இருவருமே அடுத்தவனை அலட்சியப் படுத்துகின்றனர். தவறாக மதிப்பிடுகின்றனர். ஆனால் கோட்பாட்டு ரீதியில், இந்த இரண்டுவிதமான மனிதர்களுக்குமிடையில், நூலிழை போல இன்னும் ஒன்றும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதுதான் ‘மிஸ்டரி’ (Mystery) என்று சொல்லப்படும் ‘விடை தெரியா விந்தைகள்’. விடை தெரியாத பல விந்தைகள் இன்னும் உலகில் உள்ளன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்கான விடையின்றி, காரணங்களே தெரியாமல் பல விசயங்களும், மர்மங்களும் எம்மிடையே இருந்து வருகின்றன.
இன்று எமக்கு இருக்கும் நவீன அறிவை வைத்துக் கொண்டும் கூட, அவற்றின் காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. காரணங்கள் தெரியப்படுத்தப்படாத காரியங்களை அறிவியல் முழுமையான உண்மையாக ஏற்றுக் கொள்வது இல்லை. ஆகவே அந்தக் காரணங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, அதை மிஸ்டரி என்னும் ஒன்றுக்குள் அடக்கி, அதன் விளக்கத்தை அறிவியல் ஆராய்ந்து கொண்டே இருக்கும்.
ஆனாலும் எமது அறிவியலின் ஆராய்ச்சித் தன்மைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா? ஒரு குறித்த அளவுக்கு மேல், பலவற்றை அதனால் ஆராய முடியாமல் போய் விடுகிறது. அவற்றிற்கான விளக்கத்தை அறிவியல் கொடுக்காத பட்சத்தில், மக்களே அதற்கான பல விளக்கங்களை, கட்டுக் கதைகளாகக் கட்டிவிடத் தொடங்கிவிடுவார்கள். இதனால் மிஞ்சுவது குழப்பம் மட்டும்தான். எனவே, பல விந்தைக்குரிய விசயங்கள் மக்களைச் சென்று அடைவதற்கு முன்னரே, அரசுகளால் மறைத்து வைக்கப்படுகின்றது.
இப்படி மறைத்து வைத்து, அவற்றைத் தொடர்ச்சியாக ஆராய்வதற்கென்றே, அமெரிக்காவில் ‘ஏரியா 51′ (Area 51) என்ற ஒரு இடத்தை மிகப் பாதுகாப்பாக அமைத்து வைத்திருக்கிறார்கள்.
மேலே இருப்பது சாட்டிலைட் மூலமாக ‘ஏரியா 51′ இன் காட்சிப் படம். இந்த ‘ஏரியா 51’ அமெரிக்காவில் உள்ள நிவாடாவில் (Nevada) அமைந்திருக்கிறது. குறிப்பாக ஏரியா 51 இல் பறக்கும் தட்டுகள் (Flying saucer), வேற்றுக் கிரகவாசிகள் (Alien) ஆகியவற்றை ஆராய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக, விண்வெளியில் இருந்து வந்த ஒரு பறக்கும் தட்டையும், விண்வெளி உயிரினம் ஒன்றையும் ஏரியா 51இல் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்னும் வதந்தி பலமாகவே இருக்கிறது. ஆனால் அங்கிருந்து இரகசியமாக கசிந்து வெளிவரும் தகவல்களும், படங்களும் அவை வதந்திதானா என்றே எம்மைச் சந்தேகப்பட வைக்கிறது.
ஏரியா 51 இல் எடுத்த இந்தப் படத்தில் வட்டமாக இருப்பது ஏதோ கட்டடம் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள். அதை நன்றாகப் பாருங்கள். அது பறக்கும் தட்டு போல இருக்கிறதா? இந்தப் படம் மட்டுமில்லை, ‘அலன் லூயிஸ்’ (Alen Lewis) என்பரால் வெளிக்கொண்டு வரப்பட்ட இன்னுமொரு படமும், எம்மை அதிர வைக்கும் தன்மையை உடையது.
தன்னுடைய அப்பா ஏரியா 51இல் வேலை செய்ததை அறியாத ஒரு மகன் அவர் இறந்ததும் கண்டெடுத்த படத்துடன் அவர் கொடுத்த குறிப்பு இது.
“Recently, my father passed away and while i always thought that he worked in the BLACK OPS ARENA i never thought that he had anything to do with aliens certainly, he never mentioned it. While cleaning out his house, i ran across the attached photo, if you look in the bottom right hand corned of the container there is an AREA 51 badge…”
இந்தப் படத்தை எப்படி எடுப்பது? இது பற்றி என்ன சொல்வது?
இவற்றையெல்லாம் நம்புவதோ அல்லது வதந்தி என ஒதுக்குவதோ எங்கள் பிரச்சினை என்றாலும், இது உண்மையாக இருந்தால் என்னும் கேள்வி, காட்டமான விளைவையே உருவாக்கக் கூடியது. இந்த ஏரியா 51 ஐ, ‘இன்டிபென்டன்ஸ் டே’ (Independence Day) என்னும் ‘வில் ஸ்மித்’ (Will Smith) நடித்த படத்தில் விபரமாகவே காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் அடிப்படைக் கருவே நான் மேலே சொன்னதுதான்.
இங்கு நான் ஏலியன்கள் எம்முடைய பூமிக்கு வந்திருக்கிறார்களா என்று ஏன் ஆராய வேண்டும்? ஏரியா 51 போன்றவற்றையெல்லாம் ஏன் மாயாவை ஆராயும் இடத்தில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். சரியாக யோசித்தால், மாயன்களின் அனைத்து நடவடிக்கைகளும், ஏதோ ஒரு விதத்தில் விண்ணையும், விண்வெளியின் வேற்றுக் கிரகவாசிகளையும் நோக்கியதாகவே அமைகின்றன. அவற்றிற்கெல்லாம் உச்சக்கட்டமாய் அமைந்த கிறிஸ்டல் மண்டையோடு கூட, மாயன்களுக்கு ஏலியன்கள் மூலம்தான் கிடைக்கப்பெற்றிருக்கின்றன என்ற முடிவுக்குத்தான் கொண்டு செல்கிறது. விண்ணிலிருந்து ஏலியன்கள் வந்ததற்கு சாட்சியாக ‘ஏரியா 51′ உள்ள படம் இருக்கலாம் என்றாலும், அது மட்டுமே சாட்சியாக இருந்துவிட முடியாது. ஆகவே இதை மேலும் ஆராய்ந்து பார்க்கலாம்.
இப்பொழுது நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும், மாயாவுக்கும் எந்தவிதமான சம்பந்தம் இல்லை என்று நினைத்தாலும், சம்பந்தம் உண்டு என இப்போது பல ஆராய்ச்சியாளர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சந்திரனை ஆராயச் சென்ற அப்போலோ விண்கலத்தின் ஆராய்ச்சியாளர்கள் எடுத்த இந்தப் படத்தை முதலில் பாருங்கள்.
இதில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா…..….?
கொஞ்சம் பெரிதாக்கிய இந்தப் படத்தைப் பாருங்கள். இப்போது ஏதாவது தெரிகிறதா….?
மண்டையொடு தெரிகிறதல்லவா? ஆம், அது மண்டையோடேதான். மனிதனே வாழ முடியாத சூழ்நிலை இருக்கும் சந்திரனில். இதில் ஆசரியம் என்னவென்றால் அது ஒரு கிறிஸ்டல் மண்டையோடு. இது எப்படிச் சாத்தியம்? யாரால் இதற்குப் பதில் சொல்ல முடியும்?
அந்த மண்டை ஓட்டை அப்போலோ விண்கலத்தில் சென்றவர்கள், கூடவே எடுத்தும் வந்திருக்கிறார்கள். அது இப்போ ஏரியா 51 இல் இருக்கிறது. இப்படி ஒரு மண்டையோடு சந்திரனில் எடுக்கப்பட்டதாக மக்களுக்குச் சொல்லப்படவேயில்லை. காரணம், பதிலே சொல்ல முடியாத மர்மமாக அது இருப்பதால். இப்படி ஒரு மண்டையோடு ஒன்று சந்திரனில் இருந்தது என்று உலக மக்கள் தெரிந்து கொண்டால், இதுவரை மக்கள் நம்பிய அனைத்து நம்பிக்கைகளும், மதக் கோட்பாடுகளும் அடிபட்டுப் போய்விடும். அதனால் உலகின் சமநிலையே குலைந்து விடும் சூழ்நிலை உருவாகும். இது போன்ற காரனங்களினால், அதை மறைத்து விட்டனர். அப்படி மறைக்கப்பட்டவை உலகில் பல உண்டு.
உலகின் சமநிலை குலைந்து விடக் கூடாது என்பது மட்டுமில்லை மறைக்கப் பட்டதற்குக் காரணம். விஞ்ஞான வளர்ச்சியால் கண்டுபிடிக்கப்படும் எதையும், இதுவரை மதங்களின் உச்சக் கட்டமைப்புகள் எதிர்த்தே வந்திருக்கின்றன. காரணம், மதங்களின் வேதப் புத்தகங்களில் சொல்லப்பட்டவைக்கு மாற்றாக அவை அமைந்திருப்பதுதான். உலகில் உள்ள பல அரசுகள் மதங்களின் கட்டுப்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்றும் இருக்கின்றன.
சந்திரனில் மண்டை ஓடு இருப்பதற்கான சாத்தியங்கள் என்னவாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் வந்து சேர்ந்தது அடுத்த ஒரு படம். செவ்வாய்க் கிரகத்தைச் (Mars) சுற்றி அமெரிக்கா அனுப்பிய விண்கலம் எடுத்த படங்களில், வித்தியாசமான உருவங்கள் காணப்பட்டன. அந்தப் படங்களில் மனிதத் தலை போன்ற பெரிதாக அமைப்புகள் காணப்படுகின்றன.

அது மட்டுமல்ல, மண்டை ஓடுகள் போன்றவைகளும் நிலத்தில் காணப்படுகின்றன. செவ்வாய் கிரகத்தின் மனிதத் தலை வடிவில் இருக்கும் இது என்ன
இந்தப் படம் அந்தச் சமயத்திலேயே வெளி வந்திருந்தது. ஆனால் பலர் அதை ஒரு தற்செயல் நிகழ்வெனப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது இணைய வலையமைப்பின் மூலம் உலகமே ஒன்றாக இணைந்துவிட்ட நிலையில், பல இரகசியங்களை சம்பந்தப்பட்டவர்கள் கசிய விடத் தொடங்கிவிட்டனர். அதனால் கிடைக்கும் தகவல்கள் மூலம் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இப்போது நம்மால் பார்க்க முடிகிறது
செவ்வாயில் மனித முகம், சந்திரனில் மனித மண்டை ஓடு, மாயாவில் கிறிஸ்டல் மண்டை ஓடுகள். இவற்றை இப்போது இணைத்துப் பார்க்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதனால் அவர்கள் சில முடிவுகளுக்கு வந்தனர். அவர்கள் வந்த முடிவுகள்தான் இவை…….!
பால் வெளி மண்டலம்’ எனச் சொல்லப்படும் ‘மில்க்கி வேயில்’ (Milky Way) அதியுயர் தொழில் நுட்ப அறிவுடன், மனித வடிவில் வேற்றுக் கிரகவாசிகள் வாழ்கின்றனர். அவர்கள் செவ்வாயில் தங்கள் தளங்களை அமைத்து பூமியை ஆராய்ந்து வந்திருக்கின்றனர். செவ்வாயில் ஏற்பட்ட விண்கல் தாக்குதலினால் அங்கிருந்து கிளம்பி தற்காலிகமாக சந்திரனில் தங்கியிருந்திருக்கின்றனர். இதனால்தான் செவ்வாயிலும், சந்திரனிலும் மண்டை ஓட்டு வடிவங்கள் கிடைக்கச் சாத்தியங்கள் இருந்தன.
இந்தச் சமயங்களிலேயே விண்வெளி மனிதர்கள் பூமிக்கு வந்து வந்து போயிருக்கிறார்கள். அவர்கள் வந்து போன இடங்களில் ஒன்றுதான் மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த இடம். இவர்களே மாயன்களுக்கு கணிதம், வாணியல், கட்டடக் கலை, விவசாயம், வரைகலை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் நான் கடந்த பதிவில் சொல்லியிருந்த ‘இண்டியானா ஜோன்ஸ்’ படம் எடுத்திருக்கிறார்கள்.
இண்டியானா ஜோன்ஸ்’ திரைப் படத்திற்கு ஜனரஞ்சகம் தேவை என, திரைப்பட உத்திக்காக மிகைப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும், அதன் அடிப்படைக் கரு என்பது தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் பலரது முடிவுகளாகவே இருக்கின்றது. இப்படி முடிவுகளை மற்றவர்கள் போல ஆராய்ச்சியாளர்கள் எழுந்தமானமாக எடுத்துவிட முடியாது. அப்படி எடுத்தால், ஏன் எடுத்தார்கள் என்பதற்கான காரணங்களையும் அவர்கள் சொல்ல வேண்டும்.
இந்த முடிவை அவர்கள் எடுத்ததற்கான காரணங்களையும், ஆதாரங்களையும் அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டே போனார்கள். அதில் முதன்மையாக அவர்கள் வைத்த ஆதாரம்தான் ‘நாஸ்கா லைன்ஸ்’ (Nazca Lines)
நாஸ்கா கோடுகள் என்பவை பற்றி நீங்கள் அறிந்தால், இப்படியும் உலகத்தில் இருக்கிறதா? என்று ஆச்சரியப்படுவீர்கள். தமிழர்கள் பலர் அறியாத ஒன்று அது.
அது என்ன நாஸ்கா லைன்ஸ்?
ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கிறார்களா? இல்லையா? என்னும் இரண்டு விதமான கருத்துகளில் ஆய்வாளர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டாலும், அப்படி யாரும் பூமிக்கு வரவில்லை என்பதை மையமாக வைத்தே நாம் அனைவரும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆதாரமில்லாமல் எதையும் ஒத்துக் கொள்ளாத அறிவியல், இதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பூமிக்கு ஏலியன்கள் வரவில்லை என்றுதான் அறிவியல் சொல்லிக் கொண்டிருக்கிறதே ஒழிய, ஏலியன்களே பிரபஞ்சத்தில் இல்லை என்று சொல்லவில்லை.
கலிபோர்னியா மாநிலத்தில், 42 அதியுயர் சக்திவாய்ந்த டெலஸ்கோப்கள் அமைக்கப்பட்டு, ‘பிரபஞ்சத்தில் எங்காவது உயிரினங்கள் இருக்கின்றனவா? அவை பேசும் குரல்கள் எமக்குக் கேட்குமா?’ எனத் தினம் தினம் ஆராய்ந்துகொண்டே இருக்கின்றனர். இதற்கென பல மில்லியன் டாலர் செலவும் செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் செலவைப் பொறுப்பேற்றுக் கொண்டவர் வேறு யாருமில்லை. உங்கள் எல்லாருக்குமே தெரிந்த மைக்ரோசாப்ட்டின் இணை இயக்குனரான பவுல் அலென் (Paul Allen) தான் அவர். இதனாலேயே இந்த திட்டம் ‘அலென் டெலெஸ்கோப் அர்ரே (Allen Telescope Array) என்று பெயரிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment