My Sincere Thanks to Unknown Blogger
குளங்களில் கருவேல மரங்கள் - ஏகாதிபத்திய சதி
தமிழக
விவசாயத்தில் ஏரிப்பாசனம் மிக முக்கியமான ஓர் அங்கம். குறைவான மழையும்,
நீர்வளமும் கொண்ட மேற்கு மற்றும் தென் தமிழகத்தின் முதன்மையான நீர் ஆதாரமே
குளங்களும், கண்மாய்களும், ஏரிகளும்தான். தற்போது இந்தப் பகுதிகளில்
பெரும்பாலான ஏரிகளிலும், கண்மாய்களிலும் நடுப்பகுதி முழுவதும் கருவேல
மரங்கள் அடைத்துக் கொண்டுள்ளன. இதன் காரணமாக, குளங்களின் நடுப்பகுதி
முழுவதும் மேடு தட்டிப் போய், அவற்றின் மொத்தப் பரப்பில் ஏறக்குறைய
கால்பகுதியில் மட்டுமே நீர் தேங்க இடமுள்ளது. ஏரிகளின்
கொள்ளளவு குறைந்து போனதன் காரணமாக, பல்லாயிரம் ஏக்கர் பாசன நிலங்கள்
தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. ஏரிப்பாசனத்தை நம்பியிருந்த விவசாயம்
சின்னாபின்னாமாகி வருகிறது.
குளங்களின்
நடுவே உள்ள கருவேல மரங்கள், அரசின் அலட்சியத்தால் தானே வளர்ந்தவை அல்ல.
திட்டமிட்டு நடப்பட்டு, வனத்துறையால் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருபவை.
வறண்ட நில விவசாயத்திற்கு உயிராதாரமாக இருக்கும் ஏரிகளையும்,
கண்மாய்களையும், அவற்றை நம்பியுள்ள விவசாயத்தையும், மக்கள் வாழ்வையும்
நாசமாக்கக்கூடிய விதத்தில் – ஏரிகளில் அரசே கருவேல மரங்களை நட்டு
வளர்ப்பதற்கு, அப்படியென்ன காரணம் இருந்துவிட முடியும்?
கடந்த
இருபத்தி அய்ந்து ஆண்டுகளாக, தமிழகத்தில் விவசாயத் துறை அடைந்துவரும்
மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வரும் தோழர் "விடியல்' சிவாவின்
ஆய்வுகள், இக்கேள்விக்குப் பதிலளிக்கின்றன.
“1960களில்தான்
குளங்களின் நடுவே கருவேல மரங்களை நடும் முடிவை அரசு எடுத்தது'' என்கிறார்
அவர். அதற்கு முன்பு வரை குளங்களும், ஏரிகளும் கிராம மக்களின் பொதுச்
சொத்தாகத்தான் கருதப்பட்டு வந்தன. அவற்றைப் பராமரிப்பது அதாவது கரைகளைப்
பலப்படுத்துவது, தூர்வாருவது போன்றவற்றை மக்களேதான் செய்து வந்தனர்.
குளங்களில் படியும் வண்டல் மண், விவசாயிகளால் மிகச் சிறந்த உரமாகக்
கருதப்பட்டது. வேனில் காலங்களில் குளங்களில் நீர் வற்றிப் போனதும், தரை
சேறும் சகதியுமாக இருக்கையில் முதலில் மீன்பிடி திருவிழா நடக்குமாம்.
அந்தக் குறிப்பிட்ட ஏரியின் பாசனப் பகுதியில் வாழும் மக்கள் அத்தனை பேரும்
ஒரே நாளில் ஏரியில் கூடி மீன்பிடிப்பார்களாம். மீன்கள் அனைத்தும்
பிடிக்கப்பட்டதும் தூர்வாரும் வேலை தொடங்குமாம்.
குளங்களை
சுற்றிப் பல கிலோ மீட்டர் தூரத்திற்குப் பரவியிருக்கும்
கிராமங்களிலிருந்து மக்கள் மாட்டு வண்டிகளில் படை போலத் திரண்டு
வருவார்கள். வண்டிகளில் ஏற்றிச் செல்லப்படும் வண்டல் மண், வயல்களில் கொட்டி
உழப்படும். இந்த வண்டல் மண்ணுடன் வேறு இயற்கை உரங்களையும், சில வேளைகளில்
மனிதக் கழிவுகளையும்கூட சேர்த்து விவசாயிகள் உரமாகப்
பயன்படுத்துவார்களாம். “நிலவொளியில் கருவேல மரங்களற்ற பரந்து விரிந்த
ஏரிகளிலிருந்து மண்ணெடுத்துச் சென்ற உழவர்களில் சில ஆயிரம் பேர்களாவது
இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்'' என்கிறார் சிவா.
அடுத்த
மழைக்காலத்துக்குள் குளங்கள் சுத்தமாகத் தூர்வாரப்பட்டு, கரைகள்
பலப்படுத்தப்பட்டு புதுப்புனலை வரவேற்கத் தயாராகிவிடும். பலநூறு ஆண்டுகளாக
ஏரிப்பாசனப் பகுதிகளில் விவசாயம் இப்படித்தான் நடந்து வந்தது.
பெரும்பாலும் நிலப்பிரபுக்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்த
விவசாயத்தில், ஏகாதிபத்தியத்தின் நேரடித் தலையீடு மிக அற்பமானதாகவே
இருந்து வந்தது.
ஆனால்,
உரம் மற்றும் பூச்சி மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், இரண்டாம்
உலகப் போருக்குப் பின்பு பல்கிப் பெருகின. உலகப் போர் நடைபெற்ற காலத்தில்
மனிதர்களைக் கொன்று குவிக்கும் நச்சு வாயு போன்ற ரசாயன ஆயுதங்களை
உற்பத்தி செய்து வந்த நிறுவனங்களுக்கு, அமைதிக் காலத்தில் வேறு சந்தைகள்
தேவைப்பட்டன. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உர
உற்பத்திக்கு மாறிவிட்டன. தங்களது கண்டுபிடிப்புகள் மனிதர்களுக்குப் பதில்
பூச்சிகளை யும், புழுக்களையும் அழிக்கும் என்ற பிரச்சாரம்
மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகளின் நண்பன் என்று கருதப்பட்ட மண்புழுகூட,
அழிக்கப்பட வேண்டிய உயிரிகளின் வரிசையில் சேர்க்கப்பட்டது.
எனவே,
இந்த நிறுவனங்களுக்குச் சந்தை ஏற்படுத்திக் கொடுக்கத்தான் "பசுமைப்
புரட்சி' தொடங்கப்பட்டது. வெளிநாட்டு உரங்கள் நமது வயல்களில் வெள்ளம் போல்
பாயத் தொடங்கியதும், ஏகாதிபத்தியம் நேரடியாக விவசாயிகளின் வீட்டுக்
கதவுகளைத் தட்டத் தொடங்கியதும் இந்தக் காலகட்டத்தில்தான். குளங்களில் ஏன்
கருவேல மரங்கள் நடப்பட்டன என்ற கேள்விக்கு, “பல்லாயிரம் கோடி டாலர் செலவில்
உர உற்பத்தி ஆலைகளைக் கட்டி வைத்திருக்கும் ஏகாதிபத்தியம், எப்படி பைசா
செலவில்லாமல் மக்கள் ஏரிகளின் படுக்கைகளிலிருந்து உரத்தை உற்பத்தி செய்து
கொள்வதை ஒப்புக் கொள்ளும்?'' என்று எதிர்க் கேள்வி எழுப்புகிறார் சிவா.
தமிழகத்தின்
விவசாயத்தை உர உற்பத்தி ஆலைகளின் பிடிக்குள் கொண்டுவர வேண்டுமென்றால்;
விவசாயிகளிடம் உர விற்பனை செய்ய வேண்டுமென்றால், அவர்கள் தங்களுக்குத்
தேவையான உரத்தைத் தாங்களே தயாரித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அழித்துவிட
வேண்டும். இது நடக்காதவரை உர உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் சந்தைகளை
விரிவாக்குவதற்கு வாய்ப்பே இல்லை. அதுவரை, நம் நாட்டில் படித்த மேல்தட்டு
வர்க்கத்தினர் அந்நியப் பொருட்கள் மீது தீராத மோகம் கொண்டிருந்தாலும்கூட,
விவசாயிகள் தங்கள் வேர்களின் மீது நம்பிக்கை இழந்துவிடவில்லை. ஒரு வயல்
முழுவதற்கும் பயன்படுத்த ஒரு சட்டைப் பையளவு நவீன உரம் போதும் என்று ஒரு
விஞ்ஞானி கூறியதற்கு, ஆமாம் விளைச்சலைக் கொண்டு செல்ல இன்னொரு சட்டைப் பை
போதும் என்று ஒரு விவசாயி கிண்டலடித்ததாக ஒரு கதை உண்டு.
இயற்கை
உரங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும், செயற்கை உரங்களை விவசாயிகளை
ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கும் திட்டமிட்ட முறையில் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. “ஏரிப்படுக்கைகளிலிருந்து விவசாயிகள் வண்டல் மண்
எடுப்பதைத் தடுப்பதற்காகத்தான் ஏரிகளின் நடுவே கருவேல மரங்கள் நடப்பட்டன''
என்ற முடிவுக்கு சிவா வருகிறார். ஏரிகளிலிருந்து வண்டல் மண்
எடுக்கப்படுவது தடுக்கப்படாத வரையில் உர விற்பனை சாத்தியமேயில்லை.
தன்னிறைவான இந்த முறை இருக்கும் வரை, ஏகாதிபத்திய பாணி விவசாயத்திற்கு
மாறிச் செல்ல விவசாயிகளைத் தூண்டுவது சாத்தியமேயில்லை.
இது
எப்படி நிறைவேற்றப்பட்டதென்றால், முதலில் சில குளங்கள் தேர்ந்
தெடுக்கப்பட்டு, கருவேல மரங்கள் நடுவதற்காக வனத்துறையிடம்
ஒப்படைக்கப்படும். மரங்கள் நடப்பட்டவுடன் அவற்றில் பறவைகள் தங்கும்.
அவற்றின் எச்சம் கலந்த நீர் நிலங்களுக்குப் பாயும்போது, அது ஓர் அற்புதமான,
வீரியமான சத்து நிறைந்த தண்ணீராக, நீரே உரமாக இருக்கும் என்ற
பிரச்சாரத்தை வனத்துறை சுற்றியுள்ள கிராமங்களில் மேற்கொள்ளும். துண்டுப்
பிரசுரங்கள் முதல் செய்திப் படங்கள் வரை அத்தனை பிரச்சார சாதனங்களும்
பயன்படுத்தப்படும். ஆனால், இத்தகைய பிரச்சாரம் மிகுந்த கவனத்துடன்
மேற்கொள்ளப்பட்டது. குளங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடைவெளிவிட்டு வனத்துறையால்
விழுங்கப்பட்டன.
கருவேல
மரங்கள் நடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட குளங்களையும் ஏரிகளையும் சுற்றி
மட்டுமே இந்தப் பிரச்சாரம் நடத்தப்பட்டன. அதாவது காதைக் கிழிக்கும்
அரசின் வழக்கமான பாணியில் இல்லாமல், ஏறத்தாழ ஒரு கிசுகிசுப்புப் பாணியே
நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் ஏதோ ஒரு பிரம்மாண்டமான திட்டம்
செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற செய்தி – நகரங்களை யும், மற்ற
பகுதிகளையும் எட்டிவிடாமல் தடுக்கப்பட்டது.
மழைக்காலங்களில்
குளங்களில் நீர் நிரம்பும்போது, கருவேல மரங்களால் மட்டுமே தாக்குப்
பிடித்து நிற்க முடியும். எனவேதான் இம்மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒரு
குளத்தில் அல்லது ஏரியில் கருவேல மரங்கள் நடப்பட்டதுமே வனத்துறை
வேலியிட்டு, அதை மக்களிடமிருந்து பிரித்துவிடும். குளத்தில் வண்டல் மண்
எடுப்பது மட்டுமல்ல; ஆடுமாடுகள் மேய்ப்பதுகூட வனத்துறையால் தடுக்கப்பட்டு
விடும். அப்போதிருந்து இன்றுவரை ஒவ்வொரு குளமாக வனத்துறையிடம்
ஒப்படைக்கப்பட்டு, அவற்றில் கருவேல மரங்கள் நடப்பட்டு வருகின்றன. ஆயிரம்
ஆண்டுகால வரலாறு கொண்ட ஏரிகளில் இம்மரங்கள் நடப்பட்டதால், மேடுதட்டிப் போய்
பெயருக்கு மட்டுமே ஏரிகளாக உள்ளன.
மக்களின்
எரிபொருள் தேவைக்காகத்தான் ஏரிகளில் கருவேல மரங்கள் நடப்பட்டன என்ற
அப்பட்டமான மற்றொரு பொய்யையும் சிவாவின் ஆய்வு வெட்ட வெளிச்சமாக்குகிறது.
குளத்தில் வளர்ந்திருக்கும் கருவேல மரத்தில் இருந்து ஒரு சுள்ளியை
உடைக்கக்கூட சட்டப்படி வனத்துறையின் அனுமதி பெற வேண்டியிருக்கும். இது,
கிராம மக்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததுதான். “அய்ந்தாண்டுகளுக்கு
ஒருமுறை தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் வளர்ந்திருக்கும் கருவேல மரங்கள்
வனத்துறையால் வெட்டப்பட்டு, திருப் பூருக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
அவை அங்கே தொழிற்சாலைகளில் எரி பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால்,
அது மொத்த எரிபொருள் தேவையில் ஒரு சதவிகிதம்கூட இருக்காது'' என்கிறார்.
“தங்கள்
வாழ்வில் இப்படியொரு பெரும் பாதிப்பு ஏற்படுவதை மக்கள் எப்படி ஏற்றுக்
கொண்டார்கள் என்பது ஒரு முக்கியமான கேள்வி. எப்போதாவது ஒரு முறை ஏதாவது ஒரு
விவசாயிகள் இயக்கம், குளங்களில் கருவேல மரங்களை நடக்கூடாது என்று
விடுவிக்கும் அறிக்கைகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துத் தானிருக்கும்.
ஆனால், இத்திட்டத்தின் வீச்சையும் அது ஏற்படுத்தி வரும் சர்வநாசத்தையும்
கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், இதற்கெதிராக குறிப்பிடத்தக்க
போராட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்பது உண்மைதானே. அறுபதுகளிலும்
எழுபதுகளிலும் விவசாயிகள் எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகள்/ அரசின் இந்தத்
திட்டமிட்ட தாக்குதலின் வெற்றிக்கு உதவிகரமாயிருந்தன'' என்ற முடிவுகளுக்கு
சிவா வருகிறார்.
கால்நடை
வளர்ப்பு வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது. வண்டி மாடுகள் மற்றும் உழவு
மாடுகளைப் பெறுவதில் விவசாயிகளுக்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டன. இது தவிர,
தமிழகம் முழுவதும் கூட்டுக் குடும்பங்கள் உடைபட்டதும் இந்தக்
காலகட்டத்தில்தான். விவசாயிகள் ஆயிரக்கணக்கில் சார்பதிவாளர்
அலுவலகங்களுக்குப் படையெடுத்து, கண்ணீரும் கம்பலையுமாகப் பாகப் பிரிவினை
செய்து கொண்டார்கள். குடும் பங்கள் தனித்தனித் தீவுகளாக மாறிப்போய்
பலவீனப்பட்டுப் போன நிலையில், பழைய முறையில் குளங்களுக்கு வண்டி கட்டிச்
சென்று மண்ணெடுக்கத் தேவையான ஆள்பலத்தையும் அவர்களால் திரட்ட முடியாத நிலை
ஏற்பட்டு விட்டது. தலித்துகள் பெருமளவில் நகரங்களுக்கு இடம் பெயர்ந்தது
மற்றொரு காரணம்.
கருவேல
மரங்களை நடுவது முழுவேகம் பெற்றது எண்பதுகளின் தொடக்கத்தில்தான். இந்தக்
காலத் தில் கால்நடை வளர்ப்பு ஏறக்குறைய அழிவை நெருங்கிவிட்டது. இந்த
மரங்களினால் குளத்தில் தேக்கப்படும் நீரின் அளவு கால்பகுதியாகக்
குறைந்துவிட்டது. ஆனால், நீர்ப்பாசனத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையைத்
தற்காலிகமாகச் சமாளிக்க, பம்புசெட் நிறுவனங்கள் உதவிக்கு வந்தன. நமக்கே
நமக்கென்று ஒரு போர்வெல். மழையைப் பற்றி, கொடிக்கால்கள், கால்வாய்களைப்
பற்றி கவலைப்பட வேண்டாம். பஞ்சாயத்து வேண்டாம். கூட்டு உழைப்பு வேண்டாம்.
பூமி சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டன.
எனவே,
பழைய முறையில் விவசாயம் செய்வதில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சிரமங்கள்,
செயற்கை உரம் சிறந்தது என்ற அரசின் திட்டமிட்ட பிரச்சாரம் போன்றவை, மக்களை
இப்பேரழிவு ஏற்படுத்தும் திட்டத்திற்கு எதிராகப் போராடாமல் தடுத்துவிட்டன.
பலநூறு கிலோ மீட்டர் பரந்து விரிந்திருக்கும் தமிழகத்தின் வறண்ட
நிலப்பரப்புகளில் தலைமுறை தலைமுறையாக கடும் உழைப்பாலும், அனுபவம் தந்த
அறிவாலும் மக்கள் ஏற்படுத்தியிருந்த ஏரிகளும், அவற்றைச் சுற்றியிருந்த
பசுமைத் திட்டுகளும் சுருங்கி வருகின்றன.
ஏறக்குறைய
ஏரிப்பாசனம் பெயரளவிலானதாகச் சுருங்கிப் போய் காவிரி வடிநிலத்தை மட்டுமே
நம்பியிருக்க வேண்டிய நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டு வருகிறது. ஏரிகள்
நாசமாக்கப்பட்டதால், ஏராளமான நெல்வகைகள் அழிந்து போய்விட்டன. மீன் வகைகள்
மறைந்தே போய் விட்டன. குளங்களைச் சுற்றி வாழ்ந்து வந்த மீனவர்கள், கொடும்
வறுமைக்குள் தள்ளப்பட்டு விட்டன. விவசாயிகளின் நிலையோ சொல்லவே வேண்டாம்.
“ஆனால், இத்திட்டத்திற்கு ஆங்காங்கே எதிர்ப்புகளும் இல்லாமல் இல்லை''
என்கிறார் சிவா.
திண்டுக்கல்
மாவட்டத்திலுள்ள பிலாத்து என்ற கிராம மக்கள், தங்கள் கண்மாயில் கருவேல
மரங்களை நடுவ தற்கு வனத்துறை செய்துவரும் முயற்சியை, ஆறு ஆண்டுகளாகத்
தன்னந்தனியாகப் போராடி முறியடித்து வருகின்றனர். “கொக்கோ கோலாவைப் போராடி
விரட்டிய கேரள பிளாச்சி மடத்தின் போராட்டத்திற்கு எந்தவிதத்திலும்
குறையாதது பிலாத்து கிராம மக்களின் போராட்டம். ஆனால், எந்தச்
செய்தித்தாளும் பிலாத்து பற்றிய செய்திகளை வெளியிடவில்லை;
சுற்றுச்சூழல்வாதி கள் படையெடுக்கவும் இல்லை. இருப்பினும், பிலாத்து
கிராமம் தன்னந்தனியாக தொடர்ந்து எதிர்த்து நிற்கிறது. பிலாத்து வெல்வதும்
வீழ்வதும் தமிழக மக்களின் கைகளில்தான் இருக்கிறது'' என்கிறார் அவர்.
ஆங்காங்கே
பிலாத்துகள் இருந்தாலும் அரசு (தி.மு.க., அ.தி.மு.க., தற்போதுள்ள 7
கட்சிக் கூட்டணி அரசு) எந்தவிதமான அவசரமுமின்றி, தன் வழி யில் நிதானமாக
முன்னேறி வருகிறது. கிசுகிசுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வதில் வனத்துறை,
கடந்த இருபது ஆண்டுகளில் பெரும் நிபுணத்துவம் பெற்றுவிட்டது. சின்னஞ்சிறு
ஓடைகளையும், காட்டாறுகளையும் அடிப்படையாகக் கொண்டு மக்கள் உருவாக்கிய
ஏரிப்பாசனம், ஏகாதிபத்தியத்தின் லாபவெறியால் அழிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பேரழிவு மக்களின் கண்களிலிருந்து திட்டமிட்டு மறைக்கப்பட்டு
மழையின்மையும், வறட்சியும்தான் விவசாயத்தின் அழிவுக்குக் காரணம் என்று நம்ப
வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுக்
கட்சிகள் அத்தனையுமே கருவேல மரங்களின் விஷயத்தில் பொருள் பொதிந்த மவுனம்
மட்டுமே இதுவரை சாதித்து வந்துள்ளன. அவற்றிடமிருந்து நாம் வேறெதையும்
எதிர்பார்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், இந்த மாபெரும் சதி நம்
சுற்றுச் சூழல்வாதிகள் மற்றும் புரட்சியாளர்களின் கவனத்தைக் கவராமல்
போனதுதான் ஆச்சரியம். அவர்கள் தன்னிச்சையாகத் தோன்றும் மக்கள் எழுச்சிகளில்
சவாரி செய்வதில் மட்டுமே விருப்பம் கொண்டிருப்பதால், இந்தச் சதி முழு
வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment